نوح
Noah • 28 ayahs • Meccan
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
1(நிராகரிப்பாளர்களுக்கு) நிகழக்கூடிய தண்டனையை (அது உடனே இறங்கட்டும் என்று) கேட்பவர் கேட்டார்.
2அவர் கூறினார்: “என் மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.”
3“அதாவது, நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!
4அவன் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; இன்னும், குறிப்பிட்ட தவணை வரை அவன் உங்களுக்கு அவகாசம் அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வந்துவிட்டால் அது பிற்படுத்தப்படாது. நீங்கள் (இதை) அறிபவர்களாக இருக்க வேண்டுமே!”
5அவர் கூறினார்: என் இறைவா! நிச்சயமாக நான் எனது மக்களை இரவிலும் பகலிலும் அழைத்தேன்.
6ஆனால், எனது அழைப்பு அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை, (அவர்கள் எனது அழைப்பிலிருந்து) விரண்டு ஓடுவதைத் தவிர.
7நீ அவர்களை மன்னிப்பதற்காக நிச்சயமாக நான் அவர்களை அழைத்தபோதெல்லாம் அவர்கள் தங்கள் விரல்களை தங்கள் காதுகளில் ஆக்கிக் கொண்டனர். (என்னை அவர்கள் பார்க்காமல் இருப்பதற்காக தங்களை) தங்கள் ஆடைகளால் மூடிக்கொண்டனர். இன்னும், (நிராகரிப்பில்) பிடிவாதம் பிடித்தனர். பெருமையடித்தனர்.
8பிறகு, நிச்சயமாக நான் அவர்களை பகிரங்கமாக அழைத்தேன்.
9பிறகு, நிச்சயமாக நான் அவர்களிடம் (பொது இடத்தில்) வெளிப்படையாகப் பேசினேன். இன்னும் அவர்களிடம் தனியாக இரகசியமாகப் பேசினேன்.
10ஆக, நான் கூறினேன்: நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்.
11அவன் உங்களுக்கு மழையை தாரை தாரையாக அனுப்புவான்.
12இன்னும், உங்களுக்கு செல்வங்களாலும் ஆண் பிள்ளைகளாலும் உதவுவான். இன்னும், உங்களுக்கு தோட்டங்களை ஏற்படுத்துவான். இன்னும், நதிகளை உங்களுக்கு ஏற்படுத்துவான்.
13உங்களுக்கு என்ன ஆனது அல்லாஹ்வின் கண்ணியத்தை (மகத்துவத்தை) நீங்கள் பயப்படுவதில்லை?
14திட்டமாக அவன் உங்களை பல நிலைகளாக (பல கட்டங்களாக -இந்திரியம், இரத்தக்கட்டி, சதைத்துண்டு இப்படியாக ஒரு நிலைக்குப் பின் ஒரு நிலையாக இறுதியில் முழு மனிதனாக) படைத்(து முடித்)தான்.
15ஏழு வானங்களை அடுக்கடுக்காக அல்லாஹ் எப்படி படைத்தான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?
16இன்னும் அவற்றில் சந்திரனை ஒளியாக அவன் ஆக்கினான். இன்னும், சூரியனை விளக்காக ஆக்கினான்.
17இன்னும், அல்லாஹ்தான் உங்களை பூமியில் இருந்து முளைக்க வைத்தான். (முதல் மனிதனை மண்ணிலிருந்து உருவாக்கினான். இன்னும் உங்கள் மூல சத்தை மண்ணிலிருந்து உருவாக்குகிறான்.)
18பிறகு, அவன் உங்களை அதில்தான் மீட்பான். இன்னும், (அதிலிருந்து) அவன் உங்களை (பூமியிலிருந்து) வெளியேற்றுவான்.
19இன்னும், அல்லாஹ் உங்களுக்கு பூமியை விரிப்பாக ஆக்கினான்,
20அதில் நீங்கள் விசாலமான பல பாதைகளில் செல்வதற்காக.
21நூஹ் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்தனர். இன்னும் எவனுடைய செல்வமும் பிள்ளையும் நஷ்டத்தைத் தவிர (நன்மையை) அவனுக்கு அதிகப்படுத்தவில்லையோ அவனையே இவர்கள் பின்பற்றினர்.” (அவர்கள் தாமும் வழிகெட்டு, பிறரையும் வழிகெடுக்கிற வசதிபடைத்த தலைவர்களைத்தான் பின்பற்றினார்கள்.)
22இன்னும், (இந்த மார்க்கத்தை எதிர்ப்பதற்கு) மிகப் பெரிய சூழ்ச்சி செய்தார்கள்.
23இன்னும், (தங்கள் மக்களை நோக்கி) கூறினார்கள்: நீங்கள் நிச்சயமாக உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள். இன்னும் வத்து, சுவாஃ, யகூஸ், யவூக், நஸ்ர் ஆகிய தெய்வங்களை விட்டு விடாதீர்கள்.
24அவர்கள் பலரை வழி கெடுத்தனர். ஆகவே, (என் இறைவா!) அநியாயக்காரர்களுக்கு நீ அதிகப்படுத்தாதே, வழிகேட்டைத் தவிர!
25அவர்களுடைய பாவங்களால் அவர்கள் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டார்கள். உடனே நரகத்தில் நுழைக்கப்பட்டார்கள். ஆக, அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவியாளர்களை காணவில்லை.
26இன்னும், நூஹ் கூறினார்: என் இறைவா! நிராகரிப்பாளர்களிலிருந்து பூமியில் வசிப்பவராக எவரையும் நீ விட்டுவிடாதே!
27நிச்சயமாக நீ அவர்களை (உயிருடன்) விட்டுவிட்டால் (நம்பிக்கை கொண்ட) உனது அடியார்களை அவர்கள் வழிகெடுத்து விடுவார்கள். பாவியை, மிகப் பெரிய நிராகரிப்பாளனைத் தவிர (நல்லவர்களை, நம்பிக்கையாளர்களை) அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள். (அவர்களும் வழிகெட்டு, தாங்கள் பிள்ளைகளையும் வழிகெடுப்பார்கள்.)
28என் இறைவா! என்னையும் என் பெற்றோரையும் நம்பிக்கையாளராக என் வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் மன்னிப்பாயாக! அநியாயக்காரர்களுக்கு அதிகப்படுத்தாதே, அழிவைத் தவிர!